
கரன்சிகள் தட்டுப்பாடு காரணமாக வரும் 18ம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான கடைகளில் பழைய நோட்டுக்களை வாங்காததால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை சந்தித்தனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு ஊழியர்கள் மறுத்தனர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, நவ.14ம் தேதி வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தால் இந்த சலுகை 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் 4நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.