
இதுகுறித்து, தெற்காசியா குறித்து ஆய்வு செய்து வரும், 'ஹெரிட்டேஜ் பவுண்டேஷன்' ஆய்வாளர் லிசா கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையே, சில ஆண்டுகளாக இணக்கமான உறவு நிலவுகிறது. பயங்கரவாத பிரச்னை உள்ளிட்ட விஷயங்களில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்பின் நடவடிக்கைகள், இந்த உறவுக்கு வலு சேர்க்கும். அதே சமயம், எச்., 1 - பி விசா விஷயத்தில், டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார்; பதவியேற்ற பின், இதுதொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடலாம். இந்தியர்களை நேரடியாக பாதிக்கும் இந்த பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவர், அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்தாலும், இது அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.
காப்பீட்டில் மாற்றம் : அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில், தற்போதைய அதிபர் ஒபாமா, 'ஒபாமா கேர்' என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தினார். ஆனால், 'இது அதிக செலவு பிடிக்கும் திட்டம்' எனக் கூறி, காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'நான் அதிபரானால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாற்றியமைப்பேன்' என, டிரம்ப் பிரசாரம் செய்தார்; எனவே, அவர் பதவியேற்ற பின், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.
மகன், மகளுக்கு பதவி : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப், அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகத்தை கவனிக்க, துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள, மைக் பென்ஸ் தலைமையில் குழுவை அறிவித்துள்ளார். அதிபரின் செயல்பாடுகளை தீர்மானிக்கும் இக்குழுவில், டிரம்ப்பின் மகன்கள், ஜூனியர் டிரம்ப், எரிக் டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சியின் நிர்வாகிகள் சிலரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.