
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதில் இருந்து கடுமையான பணத்தட்டுபாடு மக்களிடையே ஏற்பட்டது. மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், பொதுமக்கள் வங்கிகளுக்குச் சென்று பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வந்தனர். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நீண்ட வரிசையில் நின்று அருகில் சென்ற பிறகு, புதிய ரூபாய் நோட்டுக்கள் இல்லை என்று பொதுமக்கள் பல வங்கிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இப்படி பணப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு அதிகப் பணத்தைக் கொடுத்துவிட்டு, பொதுத்துறை வங்கிகளுக்கு போதிய அளவு பணத்தைக் கொடுக்காததுதான் காரணம் என்று வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், பணம் தொடர்பான பெரிய மாற்றம் ஒன்று கொண்டு வருவதற்கான திட்டம் ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாமல் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விட்டுவிட்டது என்றும் வங்கி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதமே 2000 ரூபாய் புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளது. புதிய அறிவிப்பால், சில்லறை நோட்டுக்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் 500 ரூபாய் புதிய நோட்டுக்களை முன்கூட்டியே வங்கிகளுக்கு வழங்கவில்லை என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 500 ரூபாய் நோட்டை முதலிலேயே அனுப்பி இருந்தால் இவ்வளவு மோசமான நிலை உருவாகி இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகக் குறைவான அளவிலேயே புதிய நோட்டுக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் பணத்தட்டுப்பாட்டை வங்கிகளால் போக்க முடியவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் வங்கியில் இருந்து திரும்பிச் செல்கின்றனர். இதுபோன்ற நிலையை, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது என்று வங்கி அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
English summary :
Reserve bank sent new Rs. 2000 notes to Banks in October, why not send Rs. 500 new notes asked Bank Officers.