புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், புதுச்சேரியில் தற்போது கஞ்சா, பாலியல் தொழில் அதிகரித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். அவர் தனது புகார் மனுவில், ``ஆன்மிகம், சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து தாராளமாக கஞ்சா தடையின்றி விற்கப்படுவதும், கஞ்சா பழக்கத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி, போதையிலிருந்து மீள முடியாமல், சமூக விரோதிகளாக மாறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன. இதில் சிறார்கள் பெருமளவு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பதும், தினம்தோறும் நாளிதழ்களில் அது குறித்து வரும் செய்திகளுமே அதற்குச் சான்றாக இருக்கிறது. அதேபோல் ரெஸ்டோ பார்கள், மசாஜ், ஸ்பா சென்டர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து இணையதளங்கள் மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் பாலியல் தொழிலும் கொடிகட்டிப் பறக்கிறது. புதுச்சேரி அரசு
புதுச்சேரிக்குச் சென்றால் மதுபானம் குடித்துவிட்டு, மசாஜ் சென்டரில் மஜாவாக இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வார இறுதி நாள்களில் உள்ளூர் மக்கள் குறிப்பாக, குடும்பப் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்திருக்கின்றனர். புதுச்சேரியை இவையெல்லாம் சீரழிப்பது போதாது என்று, பல்வேறு பகுதிகளில் சூதாட்ட கிளப்புகள் அமைக்கும் பணியில் ஆளும் கட்சியின் துணையுடன் பெருமுதலாளிகள் களத்தில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஏற்கெனவே ஏனாம் பிராந்தியத்தில் சட்டத்துக்கு விரோதமாக ’ராயல் ஏனாம் ரெக்ரேஷன் கிளப்’ மற்றும் ’விட்டல் ஏனாம் ஸ்போர்ட்ஸ் கிளப்’ என 10–க்கும் மேற்பட்ட கிளப்புகள் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மிகுந்த பகுதியில் செயல்படுகின்றன.
அதனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சமூக குற்றவாளிகள் ஏனாமுக்கு தினம்தோறும் படையெடுப்பதாகவும், நாளொன்றுக்கு ரூ.100 கோடி அளவுக்கு சூதாட்டம் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த கிளப்புகள் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகக் கூறி அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரிடம் மனு அளித்திருக்கின்றனர். ஆனால், இதுவரை அவற்றின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறை ஆய்வு நடத்த உயர்நீதி மன்றம் தடை பெற்றிருப்பதால், சூதாட்ட உரிமையாளர்கள் தைரியமாக நடத்துகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அமைதியாக இருப்பதைப் பார்த்தால், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மாதம்தோறும் கையூட்டு வழங்கப்படுவது உறுதியாகத் தெரிகிறது. சூதாட்ட கிளப் மூலம் பெரும் பணத்தைப் பார்த்த உயரதிகாரிகள்தான், புதுச்சேரியிலும் சூதாட்ட கிளப்புகளை அமைக்கும் பணிகளில் ஆர்வமாக இருக்கின்றனர்.`கஞ்சா - போதை - கொலை’ - திமுக ஆட்சியில் கேள்விக்குறியாகிறதா சட்டம்-ஒழுங்கு! - ஒர் அலசல்
ஏற்கெனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரியில் கஞ்சா, பாலியல் தொழில் போன்ற சமூக விரோதச் செயல்களுடன் சூதாட்டமும் சேர்ந்தால், கறுப்பு மாநிலமாக மாறிவிடுமோ என்று அச்சம் எழுந்திருக்கிறது. எனவே புதுச்சேரி மாநில மக்களின் நலன்கருதி, இது போன்ற சமூக விரோதச் செயல்களைச் சட்டம் இயற்றி அடக்கி ஒடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த அரசுமீது நம்பிக்கை ஏற்படும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் களைந்து புதுச்சேரிக்கு வருவார்கள். இந்தச் சட்டம் இயற்றுவதற்கு ஒன்றிய உள்துறையிடம் அனுமதிபெறத் தேவையில்லை என நினைக்கிறேன். எனவே, இந்தச் சட்டம் இயற்றுவதற்கு தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறைச் செயலர், நகராட்சி ஆணையர்களைக்கொண்ட சிறப்பு அமைச்சரவையை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடருக்குள் கூட்டி, அறிவிப்பு செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
http://dlvr.it/Svz3Zx
Tuesday, 12 September 2023
Home »
» `உங்க ஆட்சியில் கஞ்சா, பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்குது’ - புதுச்சேரி முதல்வரிடமே திமுக புகார்