
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இன்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கருகி வருகிறது.
இதன் காரணமாக கடன் பெற்று விவசாயம் செய்து நஷ்டம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், நெல் சாகுபடியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அரிசி ஆலைகளுக்கு முன்பு போல் போதிய நெல்வரத்தும் இல்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நெல் கொண்டு வரப்பட்டு ஆலைகளில் அரைத்து அரிசி விற்பனை நடைபெறுகிறது. இந்த சூழலில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரச்சினையால் அரிசி ஆலைகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல் மூட்டைகளுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை. இது மட்டுமின்றி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க போதிய பணம் இல்லாத சூழல் உருவாகி உள்ளதால் பல அரிசி ஆலைகள் மூடிக்கிடக்கிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மோட்டா ரக அரிசி கிலோ ரூ.26, சன்னரக அரிசி (பொன்னி) அதிகபட்சமாக ரூ.45 முதல் 50 வரை விற்கப்பட்டது.
ஆனால், இப்போது மோட்டார் ரக அரிசி சில்லரையில் கிலோ ரூ.32-க்கும், சன்ன ரக அரிசி அதிகபட்சமாக ரூ.55 முதல் 60 வரை விற்கப்படுகிறது.
இதில் 1 கிலோ ஒயிட் பொன்னி 64 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. இட்லி அரிசி கிலோ ரூ.35 முதல் 40 வரை விற்கப்படுகிறது.
இதுதொடர்பாக காஞ்சீபுரம் அரிசி ஆலை உரிமையாளர் ஓருவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவு நெல் வரவழைக்கப்படுகிறது. இப்போது இங்கிருந்தும் நெல் அதிகம் வராததால் மேற்கு வங்காளத்தில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டு ஆலைகளில் அரவை நடைபெறுகிறது.
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்சினையால் கொள்முதலுக்கு உடனடியாக பணம் கொடுக்க முடியவில்லை. விற்பனையும் இல்லை வசூலும் குறைந்து விட்டது. 20 நாட்களாக அரிசி ஆலைகள் ஓடாமல் உள்ளது. கையிருப்பில் உள்ள அரிசிகளைதான் விற்பனை செய்து வருகிறோம். ரூபாய் நோட்டு பிரச்சினை சீராகாமல் உள்ளதால் வியாபாரம் முடங்கி உள்ளது என கூறினார்.
ரூபாய் நோட்டு பிரச்சினையால் அரிசி ஆலைகளுக்கும் பாதிப்புதான் உள்ளது. இதனால் நெல் மண்டிகளில் கைவசம் உள்ள அரிசிகளை விற்பனை செய்து வருகிறார்கள். அரிசி விலை ஏற்றம் என்பது தற்காலிகமானது தான். நெல் வரத்து அதிகரிக்கும் போது விலை தானாக குறைந்து விடும் என்று மற்றொருவர் கூறினார்.
English summary :
Chennai: Demonetize issue impacted on Rice price increased, rice merchants says it normalized in a short period if currency note problem is solved.